Pages

Saturday, September 24, 2011

"எங்கேயும் எப்போதும் "- கண்ணீரும் காதலும் சங்கமம்.

நாம் எல்லோரும் தினமும் சாலைகளில் நடந்து செல்கிறோம்..பாதைகளைக் கடக்கிறோம்...வாகனங்களில் பயணிக்கிறோம்...வாகனங்களை ஓட்டிச் செல்கிறோம்...எப்பிடி எப்பிடியோ சாலைகளும்,வாகனங்களும் எம்மோடு நெருக்கமான தொடர்பினை பேணிக்கொண்டிருப்பவை..

தனியாக சாலைகளில் நடக்கும்போது அமைதியாக நடக்கிறோம்..ம்ஹூம்..செல்போன்களுடன் அரட்டையடித்து நடக்கிறோம்.நண்பிகளுடன் /நண்பர்களுடன் வீதிகளில் அலட்டிக்கொண்டு அலட்சியமாக அசைந்து செல்கிறோம்.அவசரத்தில் இஷ்டப்படி வீதிகளைக் கடக்கிறோம்.கதையின் சுவாரசியம் எம்மை வீதியின்மீதோ வாகனங்கள் மீதோ அதிக கவனத்தை ஏற்படுத்துவதில்லை.எல்லா நாளும் ஒரே நாளாக அமையாது என்பது அனுபவிக்கும்வரை தெரிய வாய்ப்பில்லை.

தினமும் விபத்துக்கள் பல்வேறு வடிவங்களில் நடந்துகொண்டே இருக்கிறது..உயிர்களும் கதறுகின்றன..கரைகின்றன..பத்திரிகைகளிலும்,வானொலியிலும்,தொலைக்காட்சியிலும் பார்த்திற்று,கேட்டிற்று நம் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.ம்ம்ம்ம்.பாவம்...இது மட்டுமே அந்த ஆத்மாக்களுக்கு நாம் செய்யும் உன்னத பணி.நமக்கோ,நம் உறவிற்கோ விபத்து நடக்கும்வரை ஆ!அப்பிடியா!ஹையோ பாவம்..

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
ஒரு பயணம்..ஒரு விபத்து...பலத்த அழுகை..மலர்ந்த காதல்..மடிந்த காதல்..


ஹாலிவுட் பட நிறுவனம் பாக்ஸ் ஒபிஸ், இயக்குனர் முருகதாசோடு இணைந்து தயாரித்திருக்கும் படம்.புகழ்பெற்ற பாக்ஸ் ஒபிஸ் இந்தப்படம் மூலம் தமிழ் பட உலகில் கால்பதித்திருக்கிறார்கள்..முதல் படத்திலே தங்கள் கூட்டணியை வெற்றிக்கூட்டணியாக்கியிருக்கிறார்கள்..அழகான இரு ஜோடிகள் பயணித்திருக்கும் பஸ் பயணம்.இயல்பான தெரிவுகள்..கதையோடு அழகாக பொருந்திப்போகிறார்கள்.இயல்பான நடிப்பு..

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்து + திருச்சியிலிருந்து சென்னை செல்லும் பேருந்து .ஜெய்,அஞ்சலி,சர்வானந் ஒரு பேருந்தில் பயணிக்க அனன்யா மற்றையதில் பயணிக்கிறார்.இரண்டு பேருந்துகளும் ஓரிடத்தில் மோதிக்கொள்கின்றன. அதிலிருந்து நான்கு மணி நேரத்திற்கு முன்,ஆறு மாசத்திற்று முன் என்று ஜெய் - அஞ்சலி ,சர்வானந் -அனன்யா ஆகியோரின் காட்சிகள் நகர்கின்றன.இடையில் விபத்து நடக்கிறது..பேருந்து பயணிக்கிறது ..புதிய உத்தியில் காட்சிகள்..இயக்குனர் ரசிக்கவைக்கிறார்.யாருக்கு விபத்து நடக்கும் என்பது ஊகிக்க முடியாத பயணம்.



படத்தில் கமெரா அழகாக நகர்ந்திருக்கிறது.கமெராமென் காட்சிகளை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அருமை..கமெராமென் வேல்ராஜ் படத்தின் பிளஸ்.பஸ்கள் பயணத்திற்கு தயாராகமுன் அவற்றை காட்சிப்படுத்திய விதம்,பயணிக்கும் காட்சிகள்,இறுதியில் அந்த விபத்து..நிஜமாக பார்த்த உணர்வு..கம்பியூட்டர் கிராபிக்சும்  வேலை செய்திருக்கிறது..


ஜெய் - அஞ்சலி


ஜெய் மீண்டும் ஜெயித்திருக்கிறார்.
இனசென்ட் ஹீரோவாக இயல்பாக காதலித்திருக்கிறார்.
அஞ்சலிக்கு கற்றது தமிழ்,அங்காடித்தெருவிற்குப் பிறகு ஒரு மைல்கல்.





இன்றுவரை நான் பார்த்த தமிழ் சினிமாவில் இவர்களின் காதல் வித்தியாசமான காதல்.இனசன்ட் ஜெய்.அஞ்சலியை வாங்க.போங்க என்று அழைப்பது,சம்பளக்கவருடன் துணிக்கடையில் துணிஎடுப்பது,காபி சொப்பில் காப்பி கூலா இருக்குது என்று சொல்வது..இன்னும் பல.ஜெய்யின் மனேரிசங்கள் கலக்கல். 


இன்றைய பெண்களின் பிரதிநிதி அஞ்சலி.ஜெய்க்கு அஞ்சலி "ஐ லவ் யு" சொல்லும் விதம் ரசனை.தன்னை நேசிக்கும் ஜெய்யை அஞ்சலி நடத்தும் விதம் நிஜமாக இருக்கிறது.யதார்த்தம்.ஆணை அடக்கி ஆளும் பெண்.காதலியாக வெட்கம்,கூச்சம் என்றில்லாத நாயகி.ஓரிடத்தில் அஞ்சலி "கட்டிக்கோ" என்று சொல்ல ஜெய் "கல்யாணத்துக்கு அப்புறம்க " என்பார். அதற்கு "நீ கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிக்கோ....நான் இப்ப கட்டிக்கிறன்" என்று அஞ்சலி ஜெய்யை அணைக்குமிடம் அழகிய காதல் கவிதை..இறுதிக்காட்சியில் அஞ்சலி தன் நடிப்பை நிரூபித்திருக்கிறார்..


சர்வானந் -அனன்யா

ஐ.டி இளைஞனாக தெலுங்கு நடிகர் சர்வானந் ஸ்டைலாக இருக்கிறார்..

தமிழ் பெண்கள் நெஞ்சை இனி கொள்ளைகொள்வாரென நம்பலாம்.அனன்யா சான்சே இல்லை.



நிஜமாகவே பயணித்திருக்கிறார்கள்..ஷெயார் ஓட்டவாக இருக்கலாம்..பஸ்ஸாக இருக்கலாம்..அன்றாடம் பார்க்கும்,பயணிக்கும் சக பயணிகளே.எம்மையும் அவர்களுடன் பயனிக்கவைத்துவிட்டார்கள்.





வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டு நிற்கிறது "எங்கேயும் எப்போதும் ".அடிதடி சண்டைகள்.அரை குறையாக டூயட்,ஓவர் செண்டிமென் இல்லாத பயணம்.சில உரையாடல்கள் சிறப்பாக இருக்கிறது.சில காட்சிகள் இயல்பான நகைச்சுவை.பாடல்கள் சூப்பர்...நா.முத்துக்குமாரின் வரிகள் அருமை.கோவிந்தாப்பாடலும்,சென்னையை ஒரு புதுப் பொண்ணு பார்க்கும் காட்சிகள் சூப்பர்..


சென்னைப் பெண்ணுக்கும்,சென்னைக்கு புதுப்பொண்ணுக்கும் பல இடங்களில் கற்பு வேறுபட்டு நிற்கிறது.பஸ்ஸில் அனன்யாவுடன் பயணிக்கும் பெண் காதலுடன் கதைத்துக்கொண்டு,அப்பா கால் பண்றார்..கட் பண்ணு என்று சொல்லி இன்னொரு ஆணுடன் கதைப்பது...ஒரு பெண்ணிடம் ஆடையின் குறையை சுட்டிக்காட்டி..கிராமத்துப் பெண்ணென அனன்யா பெயர் வாங்குவது..அருமை..
 = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
இயக்குனர் சரவணனுக்கு பாராட்டுகள்.


கமெராமென் வேல்றாஜிற்கும் பாராட்டுகள்.
இசையமைப்பாளர் சத்யாவிற்கும் பாராட்டுகள்..
எடிட்டர் ஆண்டனிக்கு பாராட்டுகள்.
பயணித்த ஜெய்,சர்வானந்,அஞ்சலி,அனன்யாக்கும் பாராட்டுகள்..
அந்த வாகன சாரதிகளுக்கும் (ஸ்டன்ட்) பாராட்டுகள்.. 
 =================================================
நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு யதார்த்த சினிமா.
படம் பார்த்த பிறகு வீதியில் பஸ்களைக்கண்டால் ஒரு கணம் தோன்றும் பயம் இயக்குனரின் வெற்றி..

Sunday, September 11, 2011

நல்ல மகளாக / மகனாக வாழ்!

ரொம்ப  ஸ்பீடாத்தான் போகுது வாழ்க்கை.
ஒவ்வொரு நாளும் எப்பிடித்தான் ஓடுதோ தெரியல.நாமளும் அந்த ஸ்பீடிற்கேற்ப ஓடுறோம்.நம் வேலையும் ஓடுது.நேரமும் ஓடுது.வயசும் ஓடுது.ஓடி ஓடி ஓட்டம் முடிஞ்ச பிறகுதான் அந்த ஓட்டத்தின் வேகம் தெரியுது.சில நேரம் ஸ்ட்ரைட்டா போயிற்றே இருப்போம்.சில நேரம் திருப்பங்கள்,ஸ்பீட் ப்ரேக்கர்ஸ் எல்லாம் தாராளமா வந்து நம் வேகத்தைக்குறைக்கும்.எது எப்பிடியோ ஓடியே ஆக வேண்டிய சூழல்.நாமும் அததற்கு கட்டுப்பட்டோ கட்டுப்படாமலோ,விரும்பியோ விரும்பாமலோ ஓடிற்றே இருக்கிறோம்.எம் கால்கள் ஓயும்வரை..எம்மால் ஓட முடியும்வரை...


நாம் இளைஞர்கள்.எமெக்கென ஆசைகள்...விருப்பங்கள்...இலட்சியங்கள்...ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமானவை.ஆனாலும் எல்லோருக்கும் அவர்களின் கற்பனைக்கேற்ப ஏதோவொரு ஆசை இருக்கத்தான் செய்கிறது.அந்த ஆசை கொண்ட இலட்சியத்தை அடைய நாம் காலத்துடன் ஓட வேண்டியிருக்கிறது.எவ்வளவு விரைவாக ஓடுகிறோமோ அவ்வளவு சீக்கிரம் எம் வெற்றி எம் கையில்.கொஞ்சம் கால் வலிக்கிறதே என்று தாமதித்தாலும் அடுத்த ட்ரெயினுக்கு காத்திருக்க வேண்டியதுதான்.


காலம் ஓட ஓட எமக்கான வேகத்திலும் நாம் நிதானமாக இருக்க வேண்டும்.ஓவர் ஸ்பீடா ஓடி உடம்புக்கு ஏதாவது ஆனால் எமக்கான வெற்றியுடன் உடலும்,வாழ்க்கையும் கூட போய்விடலாம்.திட்டமிட்டு காய் நகர்த்தினால் நிச்சயம் முடியும்.ஒரு வயதிற்கு மேல் பெற்றவர்களுக்கு நாம் சுமையாக இருக்க முடியாது.எம் காலில் நாம் நின்று அவர்களின் சுமையை குறைக்க வேண்டும்.முடிந்தளவு அந்த சுமையை எம் தோள்களுக்கு எடுக்க வேண்டும்.பெற்ற நாள் முதல் எத்தனை கஷ்டங்களை சுமந்து எம்மை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வருகிறார்கள்.உயர்ந்த கல்வி தருவது அல்லது சிறப்பான கல்வி வசதியைத் தருவது அவர்களின் கடமையாக இருக்கலாம்.அந்தக் கடமையை நாம் முடித்ததும் எமெக்கென பல கடமைகள் காத்திருக்கின்றன.பிறகும் அவர்களையே கடமை செய்யே வைப்பது நல்ல மகனுக்கோ / மகளுக்கோ அழகல்ல.


ஆண்மகன்தான் பெற்றவர்களின் சுமையை தாங்க வேண்டும் என்றொரு கருத்தும் எம்மவர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.ஏன்?பெண் பிள்ளையை அவர்கள் வருந்திப் பெறவில்லையா?உண்மையை சொல்லவேண்டுமென்றால் ஆண்பிள்ளைகளைவிட பெண்பிள்ளைகளையே மிகவும் கஷ்டப்பட்டு பஞ்சு மெத்தையில் வருத்தம் தெரியாமல் வளர்க்கிறார்கள்.ஆனால் அந்தப் பெண் பிள்ளை என்ன செய்கிறது?படித்து முடித்து,ஒரு தொழிலையும் எடுத்துக்கொண்டு பெற்றவர்களைப் பார்க்க அண்ணா அல்லது தம்பி இருக்கிறான்தானே என்ற நினைப்பில் அழகாக திருமணம் செய்து கொண்டு தனக்கான குடும்பத்தை சீக்கிரமே அமைத்துக் கொள்கிறது.தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய அந்தப் பெற்றோரை கொஞ்ச காலம் சுகமாக வைத்துப் பார்க்காமல் அவர்களுக்கு சீதனம் எனும் பெரிய சுமையை கொடுத்து திருமணத்தை ஏற்கிறது.ஆனால் ஆண்பிள்ளை பிள்ளையாக இருக்கிறான்.


ஆண் / பெண் எனும் வேறுபாடு இதில் தேவையென எனக்குத் தெரியவில்லை.நமக்கான சுகங்களை நாம் அனுபவிக்கும் போது கஷ்டப்பட்ட நம் பெற்றோரை சுகப்படுத்த வேண்டியது நம் கடமை.அதில் ஆணென்ன?பெண்ணென்ன?எம்மால் உழைக்க முடியும் என்ற நிலைக்கு வந்த பிறகும் தகப்பன் காசில் உண்ணுவது உண்மையில் பெருமைக்குரியதல்ல.பிள்ளைதானே என்று தகப்பன் தரலாம்.ஆனால் செலவழிக்கும்போது நமக்கு கூசாது?சமூகக் கட்டுக்கோப்பில் திருமணம் இதில் தடை போடுகிறதே என்று சொல்வதில் நியாயம் இல்லை.நீ நினைத்தால் முடியாததில்லை.முயற்சி செய்.


பெற்றவர்களே எமக்கு உண்மையில் கடவுள்கள்.உயிர் தந்து,உடமை தந்து,கல்வி தந்து,வாழ்க்கையும் தருகிறார்கள்.எமெக்கென தம் சுக துக்கங்களை மறந்து கஷ்டப்படுபவர்கள்.தம் உயிரைக்கொடுத்தேனும் எம்மை வாழ வைக்க முயற்சிப்பவர்கள்.அவர்களை பாதுகாப்பது எம் கடமையில்லையா?அவர்களை சுகமாக வாழ வைப்பது எமக்குரிய பொறுப்பில்லையா?அளவில்லா சொத்துக்களையும்,சுகங்களையும் தந்த நம் தாய்,தகப்பனுக்கு சந்தோஷத்தை கொடுப்பது எம் பொறுப்பில்லையா?அண்ணா செய்வான்.தம்பி பார்த்துக்கொள்வான் என்று நினைத்து நீ பாவத்தை தேடிக்கொள்ளாதே.அவங்களுக்கு நான் மணமாகி,பிள்ளைகளுடன் இருப்பதே சந்தோஷமாம் என்று அவர்கள் சொல்வதைக்கேட்டு வாழ முயற்சிக்காதே.குடும்பம் உனக்குத்தேவைதான்.பெற்றோரைக் காட்டிலும் அப்படியொரு தனிப்பட்ட குடும்பம் தேவைக்குரியதல்ல.விருப்பத்திற்குரியதும் அல்ல.


உனக்காக நீ வாழ்..உன் பெற்றோருக்காக வாழ்.
பெற்றோரின் ஆசையை நிறைவேற்றி வாழ்.அவர்களின் ஆசியோடு,அவர்கள் கால் நிழலில் உன் பாதுகாப்பில் வாழ வை.

நல்ல மகளாக வாழ்!நல்ல மகனாக வாழ்!






Saturday, September 10, 2011

கண்ணுக்கு மறைந்தால் கருத்திலும் மறைந்திடுமா?

மனிதன் ஒரு வித்தியாசமான உயரினம். ஆண்டவன் உயிரைப் படைத்தானா? அல்லது மூலக்கூறுகளின் சேர்க்கையால் உயிர் வந்ததா? அல்லது வேறு ஏதேனும் வகையில் உயிர் வந்ததா என்று பல்வேறு ஆராய்ச்சிகள் அன்றிலிருந்து இன்றுவரை நடந்து கொண்டிருந்தாலும் ஒவ்வொரு வகையினரும் ஒவ்வொரு விதமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். என் போன்றவர்களுக்கு உயிர் ஆண்டவன் படைப்பு.


ஒவ்வொரு மனிதனையும் பிரம்மன் எப்படிப் படைத்தானோ? கண், மூக்கு, வாய் எல்லாமே மாறுபட்டு நிற்கின்றது. குணமோ வேறுபட்டது. ஒத்த ரெட்டையாக இருந்தாலென்ன, ஒவ்வாத ரெட்டையாக இருந்தாலென்ன பிரம்மா ஐஸ்வர்யா ராயை படைத்தது போல இன்னொரு ஐஸ்வர்யா ராயை படைக்கவில்லை. அது ஜீன்ஸ் படத்திலும் பொருந்திப் போகிறது. 

குழந்தையாக இருந்ததை விட எங்களுக்கு புத்தி புலப்பட்டு நாம் விபரம் அறிந்த நாள் முதல் எத்தனை மனிதர்களுடன் பழகியிருக்கிறோம்? எத்தனை மனிதர்களிடம் உதவியை பெற்றிருக்கிறோம்? எவ்வளவு நெருக்கமாக பேசிச் சிரித்து இருக்கிறோம்? எத்தனை மனிதர்களின் அன்பைப் பெற்றிருக்கிறோம்?எத்தனை மனிதர்களிடம் அன்பும்,மரியாதையும் வைத்திருக்கிறோம்?எத்தனையெத்தனை  சம்பவங்கள், உறவுகள், நட்புகள், மனிதர்கள். 

ஆயிரக்கணக்கான மனிதர்களை கடந்து வந்திருக்கிறோம். அந்த முகங்களில் எத்தனை நம் நினைவில் உள்ளன? அல்லது அவர்களை மறக்காமல் நட்பு பாராட்டுகின்றோமா? ஒரு மனிதருடன் ஒரு சூழலில் பழகுகிறோம் அல்லது ஒரு தேவைக்காக பேசுகிறோம் அல்லது ஒரு கட்டாயத்தின் பேரில் கதைக்கிறோம். அப்புறம் அந்த சூழல் தேவை முடிவடைந்ததும் அல்லது முற்றுப்பெற்றதும் விடைபெறுகிறோம். பின்னர் அந்த மனிதர்களும், அவர்களின் நினைவுகளும் அத்துடனே நிறைவுபெறுகிறது.

அவசர சூழலா அல்லது இயந்திர வாழ்க்கையா மனிதனை கட்டிப்போட்டு ஆட்டிவைக்கிறது என்பது தெரியாது. ஆனாலும் நாம் பழகிய மனிதர்களை கடந்து கொண்டேயிருக்கிறோம். பழகும் மனிதர்களையும் என்றோ கடந்துவிடுகிறோம். இன்று நாம் மறந்து விட்ட மனிதர் நாளையும் நம்மை சந்திக்கலாம் அல்லது தேவைப்படலாம் என்பது நமக்கு ஞாபகத்தில் இருப்பதேயில்லை.

கண்ணுக்கு மறைந்தால் கருத்திலும் மறைந்திடும் என்பார்கள். பிரிந்த காதலர்கள் தங்கள் மனப் புண்ணை ஆற்றிக் கொள்ள சொல்லிக் கொள்ளும் ஆயுதம் அது. ஆனாலும் நிஜத்தில் பலருக்கும் பொருந்துவதாகவே இருக்கிறது. எத்தனையோ நபர்களையும், நிகழ்வுகளையும் இந்த ஒன்றில்தானே நாமும் மறக்கிறோம்.

Friday, September 9, 2011

பூமாதேவியா? பூகம்பமா?


"பெண்" மென்மையான குணமுடையவள், இரக்க குணம் படைத்தவள், கடல் போன்ற ஆழமான மனம் உடையவள் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் பெண்- பூமாதேவியாக, பொறுமைக்கு இலக்கணமாகச் சொல்லப்படுவது அவளுக்கே உரிய பெருமை. பெண்ணின் பொறுமை பூமாதேவியின் பெருமை போன்றதா? அல்லது ஒட்டு மொத்த பெண் சமுதாயத்திற்கே கிடைத்த பெருமையா?

காலகாலமாக நாம் செவி வழியாகக் கேட்டு, நாம் மற்றவர்களுக்கு சொல்லும் ஒரு பழமொழிதான் "பொறுத்தார் பூமி ஆழ்வார்". பொறுமை ஒரு மிகச் சிறந்த பண்பு. அந்தப் பொறுமையை கடைப்பிடிப்பது ரொம்பவும் கஷ்டமான ஒரு விஷயம். பொறுமைக்கு பூமாதேவியை உதாரணமாகக் காட்டும் நம் சமூகம், பெண்களையும் பொறுமைக்கு ஒப்பிடுகிறது. ஆனாலும் என்னைப் போன்ற பெண்கள் அந்த அடையாளப்படுத்தலுக்கு நிச்சயம் சொந்தக்காரர்கள் அல்ல.

பெண்ணிற்கு ஒரு குறிப்பிட்ட அளவீட்டுத்திட்டத்தையே இந்த சமூகம் காலகாலமாக பின்பற்றுகிறது. பெண் நிலத்தைப் பார்த்து நடக்கணும், மெதுவா சிரிக்கணும், ஆடவர்கள் கண் பார்த்து தெறிக்காதவண்ணம் உடையணியணும் , மொத்தத்தில் பூ மாதிரி இருக்கணும் என்று பலமாதிரியாக அளவிட்டுள்ள சமூகம் அவளது பொறுமைக்கும் இலக்கணம் வகுத்திருக்கிறது.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்ற கொள்கையை பெண் பின்பற்றவே வேண்டும் என்று நினைக்கும் சமூகம் எம்முடையது. ஆண்பிள்ளை எதுவும் செய்யலாம், பெண்பிள்ளை பொறுத்தே போகணும். தாயிலிருந்து மாமியார் வரை சொல்லப்படும் உபதேசங்களை கேட்க நிச்சயம் பொறுமை அவசியமே. உபதேசங்களுக்கு செவி சாய்க்காவிட்டாலோ ,அல்லது வேறு விளக்கம் கொடுத்தாலோ கெட்ட பெயர் எமக்கே மிச்சம்.குறிப்பிட்ட ஒரு வயதிலிருந்தே இந்தப் பொறுமை அவளுக்குரிய சொத்தாக்கப்படுகிறது. அன்றிலிருந்து மண்ணிற்கு சொந்தமாக அவள் போகும் வரை பொறுமை!பொறுமை!!பொறுமை!!! 

பெண் பொறுமைசாலியாக பூமாதேவியாக இருப்பது ரொம்பவுமே நல்லது தான். ஆனால் அது அவள் முன் அரங்கேறும் காட்சிகளைப் பொறுத்தது, அவளுடன் நடிக்கும் சக நடிகர்களைப் பொறுத்தது. பல காட்சிகளும், பாத்திரங்களும் அவளைச் சுற்றியிருந்து அவளை ஆட்டுவிக்க ஒட்டுமொத்தமாக அவளை மெல்லியலாளாக பார்ப்பது கொஞ்சம் நெருடுகிறது.

பூமாதேவி பொறுமைக்கு இலக்கணமானது சிறப்பு. அவள் முன் நடைபெறும் அத்தனை கொடூரங்களையும், அக்கிரமங்களையும் அவள் பொறுத்தே அமைதி காக்கிறாள். ஆனால் ஒருநாள் அவள் பொறுமை உடைகிறது. பூமாதேவி பூகம்பமாக மாறுகிறாள். இது அனைவருக்கும் தெரியும்.

பெண் பூமாதேவியாக இருப்பதும் பூகம்பமாக மாறுவதும் அடிக்கடி நடக்கிறது, நடக்கவும் இருக்கிறது வீடுகளிலும், நாடுகளிலும்.

Monday, September 5, 2011

பெண் கடமைப்பட்டவள்.

பெண் ஒரு மென்மையான ஜென்மமாக பலராலும் நோக்கப்பட்டாலும் அந்த மென்மைக்குள் எத்தனை துயரங்களும்,கண்ணீர்க்கறைகளும்,வாய்விட்டு கூறமுடியா,அழமுடியா சம்பவங்களும் சமாதியாகியிருக்கின்றன என்று யாருக்குமே தெரிவதில்லை.ஒரு பெண்ணின் ஜனனம் இன்னொரு பெண்ணின் அழுகையிலே ஆரம்பிக்கிறது.அதே போல மற்றயவளின் துயரம் ஆரம்பமாகிறது.பெண் வெளிப்படையாக அழுவாளோ இல்லையோ மனசுக்குள் அவள் நிச்சயம் அழுவாள்.அவளின் தலையணை ஈரமே அவளின் சோகத்திற்கு சாட்சி சொல்லும்.


பிறந்தபோது எதுவுமே தெரியாமல் விளையாட்டோடும்,சிரிப்போடும் நகரும் நாட்கள்தான் அவளின் சிறந்தநாட்களாக இருக்க முடியும்.ஆனால் என்ன அந்த நாட்கள் அவளின் நினைவுகளில் நிற்பது அதிசயமே.அதன் பிறகு அவள் வாழும் நாட்கள் கொஞ்சம் சிக்கலானவையே.சொல்றதுக்கு எதுவுமே இல்ல.பள்ளிப்பருவத்திலிருந்து கட்டுக்காவல்களுடன் அவள் வாழ்க்கை நகர்கிறது.தகப்பனின் கட்டுப்பாட்டிற்கு கடமைப்பட்டவளாக அவள் வாழ்கிறாள்.குடும்பம் அதன் குலம்,கோத்திரம்,சம்பிரதாயம் என்பவற்றிற்கு அடங்கியே அவளின் ஆசைகளும்,வாழ்க்கையும் தீர்மானிக்கப்படுகிறது.அண்ணா,தம்பி போன்ற உறவுகளும்கூட அவளின் இலட்சியங்களில் விளையாடுகின்றன.அக்கா,தங்கை உறவுகள் அவளின் வாழ்க்கையிலே காய் நகர்த்துகின்றன அவர்களும் பெண்ணாக இருந்தும்.

அந்தக் காவலிலிருந்து வெளியேறினால் அது இன்னும் கொஞ்சம் சிக்கலுக்குரிய கடமைகள் கூடிய காவலைத் தருகிறது.திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவாம்.சொர்க்கங்கள் நரகங்களைத் தராவிட்டாலும் சுமைகளை நிச்சயம் தந்தே தீரும்.ஒரு குழந்தையாக,சிறுமியாக,யுவதியாக வாழும் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டது மனைவியாக வாழும் வாழ்க்கை.மனைவியாக வாழும்போது அவள் கட்டுப்படவேண்டிய நபர்களும்,நிகழ்வுகளும் அதிகம்.ஓய்வற்ற,தூக்கமற்ற,நிம்மதியற்ற வாழ்க்கை அவளின் தலையெழுத்து.



என்ன இது?எல்லாருக்கும் இதேதானே எழுதப்பட்ட வாழ்க்கை.இவங்க என்ன இப்பிடி புலம்புறாங்க என்று நீங்கள் யோசிக்கலாம்.ஏன்?இவங்க சந்தோஷமா இல்லையா என்றும் யோசிக்கலாம்.எல்லோரும் இதைத்தானே சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று எல்லோரும் நினைக்கலாம்.ஆனால் ஒரு சின்ன சம்பவம் அவளின் வாழ்க்கையின் முறையை,கடமையை யோசிக்க வைக்கலாம்.அல்லது வாழும் வாழ்க்கையை விளங்க வைக்கலாம்.சோகம் இல்லாத மங்கை நிச்சயம் அதிஷ்டம் செய்தவள்.

பெண் காவலில் வாழ்வது அவளின் பாதுகாப்புக்கருதியே.அவளின் மணவாழ்வு அவள் விரும்பி ஏற்றுக்கொள்வதே.தாயெனும்  புனித ஸ்தானத்தை அவளுக்கு கொடுப்பது அந்த மனைவியெனும் பதவியும்,அதன் வாழ்க்கையுமே.தந்தை,அண்ணா,தம்பி என ஒரு வேலிக்குள் வாழ்ந்த அவளை பின்னர் பாதுகாப்பது கணவன் எனும் காவலனே.எல்லாம் சரி.எல்லாம் தீர்மானிக்கப்பட்டவை.எல்லாம் நிதர்சனமான உண்மைகள்.ஆனால் என்ன?பெண்ணைப்பற்றி கொஞ்சம் மற்றையவர்கள் யோசிக்கலாம்,அவளின் ஆசைகளையும்,சுதந்திரங்களையும் கருத்தில் கொள்ளலாம்.பெண்ணின் கடமைகளில் கொஞ்சத்தை பொறுப்பேற்கலாம்.கொஞ்சம் நிம்மதியாக சுவாசிக்கவிடலாம்.

உரிமைகளையும்,சுதந்திரங்களையும் பேசுபவர்கள் கடமைகளை செய்யத்தானே வேண்டும் என்று எல்லோரும் கேட்கலாம்.கேள்வி நியாயமானதே.கடமைகளின் கஷ்டத்தை உணர்ந்தவராக நீங்கள் இருந்தால் பேசமாட்டீர்கள்.